Published : 06 Jan 2018 09:51 AM
Last Updated : 06 Jan 2018 09:51 AM

தனக்கு எதிராக அளிக்கப்பட்ட சாட்சி விவரங்களை வழங்க கோரி சசிகலா மனு: நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தாக்கல்

தனக்கு எதிராக அளிக்கப்பட்ட சாட்சி விவரங்களை தன்னிடம் வழங்க வேண்டும் என்று கோரி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெ.தீபக், முன்னாள் தலைமைச் செயலர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாக்குமூலங்கள் அடிப்படையில் விசாரணை ஆணையம் சார்பில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு கடந்த டிசம்பர் 21-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக, விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

விசாரணை ஆணையம் சார்பில் வழங்கப்பட்ட சம்மனில், விசாரணை ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளில் சிலர், தங்களுக்கு (சசிகலா) எதிராக ஆதாரங்களை அளித்துள்ளனர். அதனால் தங்களை ஒரு சாட்சியாக விசாரணைக்கு அழைக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே, நீங்களோ அல்லது உங்கள் தரப்பு வழக்கறிஞர் மூலமாகவோ அல்லது பிரமாண பத்திரமாகவோ, சம்மன் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் உரிய நேரத்தில் தாங்கள் சாட்சியாக விசாரணைக்கு அழைக்கப்படுவீர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த வகையான குற்றச்சாட்டு?

மனுதாரருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பும்போது, சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பான ஆதாரங்களையும் அனுப்பி இருக்க வேண்டும். அவ்வாறு அனுப்பாததால் மனுதாரருக்கு எதிராக எந்த வகையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்பதை தெரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் விசாரணை ஆணையம் கேட்டுள்ளபடி மனுதாரரால் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, தனக்கு எதிராக சாட்சியம் அளித்தோரின் பெயர்கள், அவர்கள் வழங்கிய ஆதாரங்களை மனுதாரரின் வழக்கறிஞரிடம் வழங்க வேண்டும். அன்றிலிருந்து மனுதாரருக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். மேலும் விசாரணை ஆணையத்தில் சம்மந்தப்பட்ட சாட்சிகளிடம் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும். அதன் பிறகு, ஆதாரங்களுடன் கூடிய பிரமாண பத்திரத்தை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x