Published : 06 Jan 2018 10:00 AM
Last Updated : 06 Jan 2018 10:00 AM

கோடையில் குடிநீர் பஞ்சம் வராது: சென்னை குடிநீர் வாரியம் உறுதி

கோடை காலத்தில் சென்னை யில் குடிநீர் பஞ்சம் வராது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஆண்டு கோடையில் ஏரிகள் அனைத்தும் வறண்டன. ஆனால் அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தற்போது 5.5 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியும் நிரம்பியுள்ளது. சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் நிலத்தடி நீர்மட்டம், கடந்த ஆண்டை விட கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

தற்போது வீராணம் ஏரியில் இருந்து 170 மில்லியன் லிட்டர், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் 200 மில்லியன் லிட்டர், 4 ஏரிகளில் இருந்து 280 மில்லியன் லிட்டர் என மொத்தம் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் பெறப்பட்டு சென்னையில் விநியோகிக்கப்படுகிறது.

மேலும், தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர் வரத் தொடங்கியுள்ளது. அதனால் தற்போது சென்னை குடிநீர் வாரியம் தினமும் வழங்கி வரும் 650 மில்லியன் லிட்டர் அளவு குடிநீரை, வரும் அக்டோபர் மாதம் வரை தொடர்ந்து வழங்க முடியும். எனவே கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்ற தவறான வதந்திகளால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x