Published : 06 Jan 2018 09:49 AM
Last Updated : 06 Jan 2018 09:49 AM

4-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் 10-ம் தேதி தொடக்கம்: முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நடந்தது

தமிழகத்தின் 4-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் வரும் 10-ம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெற உள்ளது. இதில் 6 நாடுகளைச் சேர்ந்த 12 பலூன்கள் பங்கேற்க உள்ளன.

சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக சர்வதேச பலூன் திருவிழா கடந்த 3 ஆண்டுகளாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடத்தப்பட்டு வருகிறது. 4-வது ஆண்டு பலூன் திருவிழா வரும் 10-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது.

இந்த விழாவுக்கான முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக சுற்றுலாத் துறை ஆணையர் பழனிக்குமார் பங்கேற்று விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறும் போது, “தமிழகம் சுற்றுலா பயணிகள் வருகையில் கடந்த 3 மூன்று ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சியை சிறந்த தலமாக மாற்ற தேவையான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு பலூன் திருவிழாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்றார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இலச்சினையுடன் கூடிய தேசிய கொடி வண்ணத்திலான பலூன் உட்பட 4 பிரம்மாண்ட வெப்ப காற்று பலூன்கள் பறக்கப்படவிடப்பட்டன. அதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x