Published : 06 Jan 2018 09:27 AM
Last Updated : 06 Jan 2018 09:27 AM
தமிழகத்தில் ஒரு கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொங்கல் திருநாளை ஏழை, சாமானிய மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை உடைய குடும்பங்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கடந்த மாதம் 29-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.
இப்பரிசுத் தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீள கரும்புத் துண்டு ஆகியவை வழங்கப்படுகிறது. இவை பொங்கலுக்கு முன்னரே நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.210 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. ஒரு கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதன் அடையாளமாக நேற்று தலைமைச் செயலகத்தில் 7 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி முதல்வர் கே.பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளையும் முதல்வர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், தலைமைச் செயலர் (பொறுப்பு) கே.சண்முகம், உணவுத்துறை செயலர் குமார் ஜெயந்த், நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் எம்.சுதாதேவி, உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் எஸ்.மதுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு, ஜன.6 (இன்று) முதல் அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT