Published : 06 Jan 2018 09:18 AM
Last Updated : 06 Jan 2018 09:18 AM

தமிழகத்தில் 4 மாதங்களில் 15,589 பேருக்கு டெங்கு பாதிப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் 15,589 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 46 பேர் இறந்துள்ளனர் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் தினமும் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்து வருகின்றனர். டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் 2013-ல் டெங்குக்கு 6,122 பேர், சிக்குன் குனியாவுக்கு 859 பேர், 2014-ல் டெங்குக்கு 2,804 பேர், சிக்குன் குனியாவுக்கு 543 பேர், 2015-ல் டெங்குக்கு 4,535 பேர், சிக்குன் குனியாவுக்கு 329 பேர், 2016-ல் டெங்குக்கு 2,531 பேரும், சிக்குன்குனியாவுக்கு 86 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடப்பாண்டில் அக்டோபர் 30-ம் தேதி வரை டெங்குக்கு 16,301 பேரும், சிக்குன் குனியாவுக்கு 96 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குக்கு 2014-ல் 3 பேர், 2015-ல் 12 பேர், 2016-ல் 5 பேர், நடப்பாண்டில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். சிக்குன் குனியாவால் உயிரிழப்பு இல்லை எனக் கூறப்பட்டிருந்தது.

பின்னர் அக். 30-ம் தேதிக்கு பிந்தைய டெங்கு பாதிப்பு விவரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கடந்த ஆண்டில் செப்டம்பரில் 2,687 பேரும், அக்டோபரில் 6,124 பேரும், நவம்பரில் 4,834 பேரும், டிசம்பர் மாதத்தில் 1,944 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 46 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து டெங்குவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x