Published : 10 Dec 2017 10:55 AM
Last Updated : 10 Dec 2017 10:55 AM
மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்காக குழாய் பதிக்கும் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்காக பேசின் பாலம் முதல் கொருக்குப்பேட்டை வழியாக குழாய் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது, சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கழகத்துக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்ல குழாய் பதிக்க பெட்ரோலிய கழகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்தக் குழாய் பதிப்பு பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி வடசென்னை கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் சுகுமாரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம், நீதிபதி ரவிச்சந்திரபாபு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் அனுமதியைப் பெறாமல், 5 அடி முதல் 10 அடி வரை தோண்டி குழாய் பதிக்கப்பட உள்ளது. ஏற்கெனவே கடல் அரிப்பு பாதிப்புள்ள இப்பகுதியில் மக்களின் கருத்தை கேட்காமல் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருவதாக மனுதாரர் தரப்பில் புகார் கூறப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், குழாய் பதிப்பு பணிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி, மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT