Published : 10 Dec 2017 10:45 AM
Last Updated : 10 Dec 2017 10:45 AM

கோயம்பேடுக்கு வரத்து அதிகரிப்பு: காய்கறிகளின் விலை வெகுவாக குறைந்தது

கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று தக்காளி விலை கிலோ ரூ.20, பீட்ரூட் ரூ.15, முள்ளங்கி ரூ.8 என குறைந்திருந்தது.

கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா, ஆந்திராவில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பிறகு வறட்சியாலும், ஜூன் மாதத்துக்குப் பிறகு தென்மேற்கு பருவமழையால் பயிர்கள் சேதமடைந்ததாலும், கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்தது. அதனால் காய் கறிகளின் விலை உயர்ந்தது. தக்காளி ரூ.50 வரையும், சாம்பார் வெங்காயம் ரூ.150 வரையும், அவரைக்காய், கேரட், பீன்ஸ் ஆகியவை ரூ.60 வரையும் உயர்ந்தன.

இந்நிலையில், அண்டை மாநிலங்களில் மழைக்காலம் முடிந்த பிறகு, மேற்கொள்ளப்பட்ட சாகுபடியில் இருந்து தற்போது நல்ல மகசூல் கிடைத்து வருகிறது. அதனால் தற்போது அங்கிருந்து கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்து, அவற்றின் விலை குறைந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரூ.40-க்கு விற்கப்பட்ட தக்காளி நேற்று ரூ.20-க்கு விற்கப்பட்டது. சாம்பார் வெங்காயம் ரூ.110, கத்தரிக்காய் ரூ.20, அவரைக்காய் ரூ.35, முள்ளங்கி ரூ.8, முட்டைக்கோஸ் ரூ.12, கேரட் ரூ.40, பீட்ரூட் ரூ.15, பச்சை மிளகாய் ரூ.20 என குறைந்துள்ளது. வெங்காயம் ரூ.42, வெண்டைக்காய் ரூ.35, பாகற்காய் ரூ.25, பீன்ஸ் ரூ.60, புடலங்காய் ரூ.18 என இந்தக் காய் கறிகள் பெரிய அளவில் விலை ஏற்ற, இறக்கம் இன்றி விற்பனையாகி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x