Published : 10 Dec 2017 09:54 AM
Last Updated : 10 Dec 2017 09:54 AM
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கக் கோரி ஆர்.கே. நகரில் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனை ஆதரித்து 39-வது வார்டு பகுதியில் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு கூட்டம் கூட்டமாக மாற்றுக் கட்சியினர் சுற்றி வருவதை பார்த்த அவர், தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாகக் கூறினார். பணப் பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்க வலியுறுத்தி புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டார்.
அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதியில் வெள்ளிக்கிழமையன்று 40-வது வார்டு பகுதியில் பிரச்சார கூட்டத்தை நடத்தினோம். அப்போதே சிலர் பணம் கொடுப்பதற்கு பட்டியல் எடுத்துக் கொண்டிருந்தனர். அதேநிலை தற்போது 39-வது வார்டு பகுதியில் நிலவுகிறது. வெளியூர், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தொகுதிக்குள் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறியது. அதை நாங்கள் நம்பினோம். ஆனால், தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து சில கட்சிகளின் தொண்டர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் இத்தொகுதியில் தங்கியுள்ளனர். நேர்மையாக தேர்தலை நடத்த முடிந்தால் நடத்துங்கள். இல்லாவிட்டால் நிரந்தரமாக இந்த தொகுதியில் தேர்தலை நடத்தாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்துக்கு சென்று ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கக் கோரி தமிழிசை சவுந்தரராஜன் புகார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT