Published : 10 Dec 2017 09:49 AM
Last Updated : 10 Dec 2017 09:49 AM

கோரிக்கைகளுக்கு தீர்வு காணாவிட்டால் 15-ம் தேதிக்கு பிறகு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு: 10 தொழிற்சங்கங்கள் கூட்டாக தகவல்

அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணாவிட்டால், 15-ம் தேதிக்கு பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக 10 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

போக்குவரத்து ஊழியர்களின் ஆலோசனைக் கூட்டம், பல்லவன் இல்லத்தில் உள்ள தொமுச அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட 10 தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு தொமுச பொதுச்செயலாளர் மு.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:

போக்குவரத்து ஊழியர்கள் கடந்த மே மாதம் நடத்திய வேலை நிறுத்தத்துக்கு பிறகு, அவர்களின் கோரிக்கைகள் மீது 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என 3 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு உறுதி அளித்தது. நிலுவைத் தொகை ரூ.1,250 கோடி வழங்கப்பட்டது. ஆனால், போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதியம் நிர்ணயிக்கவில்லை. ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகையை முழுமையாக வழங்கவில்லை.

கடந்த 6 மாதங்களில் ஊழியர்களின் பணம் ரூ.1,500 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களின் நிலுவைப் பணத்தை உடனடியாக வழங்க வேண்டும், போக்குவரத்து கழகங்களின் வரவு – செலவுக்கான இடைவெளியை அரசே ஏற்று மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

அதன்படி, வரும் 13-ம் தேதி பேருந்து நிலையங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியும், 14, 15-ம் தேதிகளில் அனைத்து மண்டலங்களிலும் காத்திருக்கும் போராட்டமும் நடத்தவுள்ளோம். அதற்குள், தமிழக அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், வேலைநிறுத்தத்தை அறிவிப்போம்.

இவ்வாறு மு.சண்முகம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x