Published : 10 Dec 2017 09:39 AM
Last Updated : 10 Dec 2017 09:39 AM

கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர்: மருத்துவ மாணவர்கள் 22-வது நாளாக போராட்டம்

அரசு மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் கலந்தாய்வை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய (எம்ஆர்பி) கலந்தாய்வுக்கு முன்பு நடத்த வேண்டும், ஏற்கெனவே நடந்து முடிந்த அனைத்து எம்ஆர்பி நேர்முகத் தேர்வு கலந்தாய்வுகளையும் ரத்து செய்துவிட்டு மீண்டும் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 17-ம் தேதி முதல் அரசு மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

சுகாதாரத்துறை அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணனுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஒரு பிரிவு பட்டமேற்படிப்பு மாணவர்கள் மட்டும் போராட்டத்தில் இருந்து விலகினர். மீதமுள்ள மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

நேற்று 22-வது நாளாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) அலுவலகத்தில் மருத்துவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் கறுப்பு நிற பலூன்களை வானில் பறக்கவிட்டனர்.

இந்த போராட்டம் தொடர்பாக மருத்துவ மாணவர்கள் கூறும்போது, “எங்கள் போராட்டம் 22-வது நாளை எட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு படிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இவைதவிர அந்தந்த அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x