Published : 10 Dec 2017 09:26 AM
Last Updated : 10 Dec 2017 09:26 AM

இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்த விடுதலைப் போராட்ட வீரருக்கு தியாகி பென்ஷன் வழங்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து நாட்டின் விடுதலைக்காக ஓராண்டு சிறைவாசம் அனுபவித்த சுதந்திர போராட்ட வீரருக்கு தியாகி பென்ஷன் வழங்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தேசிய விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1943-ம் ஆண்டு இந்திய தேசிய ராணுவத்தைத் தொடங்கியபோது, 14 வயதாக இருந்த முனுசாமி அதில் சேர்ந்தார். தீவிர சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை, ஆங்கிலேய அரசு கைது செய்து ரங்கூன் சிறையில் அடைத்தது.

ஓராண்டு சிறைவாசத்துக்குப் பின் 1950-ல் இந்தியா திரும்பினார். 1982-ம் ஆண்டு முதல் தியாகிகள் பென்ஷன் கேட்டு, மத்திய, மாநில அரசுகளின் கதவைத் தட்டிய அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பென்ஷன் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி 2008-ம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆனால், போதுமான ஆதாரங்கள் சமர்ப்பிக்கவில்லை எனவும் 14 வயதில் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் கூறி அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

2 மாதங்களில் தர வேண்டும்

இந்த உத்தரவை எதிர்த்து முனுசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், ‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும்.

ஆவணங்களை பார்க்கும்போது அவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால், தகுதி பெற்ற நாளில் இருந்து இதுவரைக்கும் அவருக்கு வழங்க வேண்டிய பென்ஷன் பாக்கியை 2 மாதங்களில் வழங்க வேண்டும். மாதா மாதம் 5-ம் தேதிக்குள் அவருக்கு பென்ஷன் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x