Published : 10 Dec 2017 09:26 AM
Last Updated : 10 Dec 2017 09:26 AM

புயலில் சிக்கிய 4 மீனவர் நாகை திரும்பினர்: மேலும் 12 பேரை மீட்க அரசுக்கு கோரிக்கை

ஒக்கி புயலில் சிக்கி காணாமல்போன நாகை மாவட்ட மீனவர்கள் 4 பேர் நேற்று ஊர் திரும்பினர்.

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல், தொடுவாய், கூழையார் ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் கேரள மாநிலத்தில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த நவ.26-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போனார்கள்.

இந்நிலையில், தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாயவன், விஜயநாதன், கலைச்சந்திரன், பார்த்திபன் ஆகிய 4 மீனவர்கள் நேற்று சொந்த ஊர் திரும்பினர்.

தாங்கள் புயலில் சிக்கி தப்பி வந்தது குறித்து மீனவர்கள் கூறியதாவது: கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கடந்த நவ.26-ம் தேதி கடலுக்குச் சென்றோம். நான்கைந்து நாட்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. 150 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தோம். 5-வது நாள் கடுமையாக வீசிய காற்றின் போக்கில் எங்கள் படகு சென்றுகொண்டே இருந்தது. படகை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

சுமார் 300 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவுவரை சென்ற படகில் தத்தளித்தபடி இருந்தோம். எங்கு இருக்கிறோம், எந்தப் பக்கம் போக வேண்டும் என எதுவும் தெரியவில்லை. 2 நாட்களுக்குப் பின் இந்திய கடற்படை கப்பல் வந்தது. அவர்கள் எங்களின் நிலையை அறிந்து தேவையான உதவிகள் செய்து கரைக்கு அனுப்பி வைத்தனர் என்றனர்.

புஷ்பவனம் மீனவர்கள் 4 பேர்

நாகை மாவட்டம் புஷ்பவனம் மீனவர் காலனியைச் சேர்ந்த கல்விச்செல்வம்(44), அஞ்சப்பன்(40), இளங்கோ(27), சின்னையன்(55) ஆகிய நால்வரும் தூத்துக்குடி மாவட்டம் தூத்தூரில் உள்ள மீனவர் ஒருவரிடம் மீன்பிடித் தொழிலாளர்களாக வேலைசெய்து வருகின்றனர். நவ.26-ம் தேதி தூத்துக்குடி மீனவர்கள் 9 பேருடன் நால்வரும் கடலுக்குச் சென்றுள்ளனர். புயல் சீற்றத்தில் கர்ப்பணித்தீவு என்ற இடத்தில் கரையொதுங்கிய இவர்கள், புயல் ஓய்ந்தபின் வல்லத்தை மெதுவாக இயக்கி கரைசேர்ந்துள்ளனர். ஆளில்லா ஒரு தீவில் தவித்த 2 தமிழக மீனவர்களையும் மீட்டு வந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x