Published : 13 Oct 2017 03:42 PM
Last Updated : 13 Oct 2017 03:42 PM

வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானத்துக்கு முன்ஜாமீன்

கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் வழக்கறிஞரை தாக்கியதாக போலீஸார் பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் கோரிய நடிகர் சந்தானத்துக்கு 2 வாரம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.

நடிகர் சந்தானம் குன்றத்தூர் அருகே, திருமண மண்டபம் கட்ட வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியுடன் ஒப்பந்தம் போட்டு அந்நிறுவனத்திற்கு முன்பணம் கொடுத்திருந்தார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நிறுவனம் திருமணம் மண்டபத்தை 3 ஆண்டுகளாக கட்டாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்குமிடையே போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சந்தானத்திற்கு திருப்பி கொடுத்த தொகையில் மீதமுள்ள தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்கச் சென்றபோது சந்தானத்துக்கும், அதன் நிறுவனர் சண்முக சுந்தரம், அவரது நண்பரும் வழக்கறிஞருமான பிரேம் ஆனந்துக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் வழக்கறிஞர் பிரேம் ஆனந்துக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. சந்தானமும் தாக்கப்பட்டார். தாக்குதல் தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிரேம் ஆனந்த் சந்தானம் மீது வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் சந்தானம் மீது 506(1), 294(பி), 324 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தன்னை கைது செய்யக்கூடும் என்று அஞ்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு சந்தானம் மனுதாக்கல் செய்தார்.

அவரது முன் ஜாமீன் மனுவில் ”இந்த தாக்குதல் நடவடிக்கைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தவறாக என் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி ஆதிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. சந்தானம் இரண்டு வாரம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி சந்தானத்துக்கு முன் ஜாமீன் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x