Published : 13 Oct 2017 09:38 AM
Last Updated : 13 Oct 2017 09:38 AM
திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளைஞரை காரில் கடத்தி சென்று, வாயில் விஷம் ஊற்றி கொலை செய்ய முயன்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் பத்மநாபன். திருவனந்தபுரத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது மகன் வேலுபிரபாகரன்(25). இவரும் தெய்வநாயகப்பேரியைச் சேர்ந்த 23 வயது பெண்ணும் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்துகொண்டு திருவனந்தபுரத்துக்கு சென்றுவிட்டனர்.
காரில் கடத்தினர்
இந்நிலையில், நாங்குநேரி அருகே காரங்காட்டில் இருக்கும் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்று சம்பந்தப்பட்ட பெண்ணை அவரது தம்பி வெள்ளைப்பாண்டி தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண் தனது கணவனுடன் நேற்று முன்தினம் காரங்காட்டுக்கு வந்தார்.
அப்போது, வேலுபிரபாகரனை வெள்ளைப்பாண்டியும், அவரது உறவினர்கள் 3 பேரும் சேர்ந்து காரில் கடத்தி சென்று அங்குள்ள காட்டுப்பகுதியில் வைத்து தாக்கியதாக தெரிகிறது. பின்னர் அவரது வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி, கை கால்களை கட்டி தண்டவாளத்தில் போடுவதற்காக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இட்டேரி காட்டுப்பகுதியில் சென்ற போது கார் திடீரென பழுதாகி நின்று விட்டது.
பின்னர் நண்பர் மூலம் மோட்டார் சைக்கிளை கொண்டு வரச்செய்து, அதில் வேலுபிரபாகரனை ஏற்றிச் சென்றனர். அதிகாலை 2 மணியளவில் பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரி சாலையில் அவர்கள் சென்றபோது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பாளையங்கோட்டை போலீஸாரிடம் சிக்கினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வேலுபிரபாகரனை போலீஸார் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வெள்ளைப்பாண்டி, அவரது உறவினர்கள் இட்டேரியைச் சேர்ந்த சுரேஷ், செல்வகுமார், முருகன் ஆகியோரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT