Published : 13 Oct 2017 09:29 AM
Last Updated : 13 Oct 2017 09:29 AM

உரிமைக்குழு நோட்டீஸுக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 27-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்றதால் சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் 21 பேருக்கு பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி 21 பேரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், ‘குட்காவை காரணம் காட்டி எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் குறுக்கு வழியில் பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என நினைத்து பேரவை உரிமைக்குழு இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. எனவே, உரிமைக்குழு நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தனர்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, ‘‘மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை இந்தப் பிரச்சினை தொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’’ என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவைச் செயலாளர் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘‘பதில் மனு தயாராக உள்ளது. அதை எதிர்மனுதாரர்களுக்கு இன்றைக்குள் வழங்கி விடுவோம். எனவே, வழக்கை வேறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும்’’ என்றார்.

அதையடுத்து விசாரணையை அக்டோபர் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால தடையையும் நீ்ட்டித்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x