Published : 13 Oct 2017 09:28 AM
Last Updated : 13 Oct 2017 09:28 AM

அரசு ஊழியருக்கு 3% அகவிலைப்படி உயர்வு: 7-வது ஊதியக்குழு பரிந்துரைக்கான அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நிலுவைத்தொகை உடனே வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல் படுத்தி, நிலுவைத் தொகையையும் வழங்கியது. இதை தமிழகத்தில் அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

இதன்மூலம், இந்த ஆண்டு அக்டோபர் முதல் பணப்பயனுடன் புதிய ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இதற்கான அரசாணையையும் நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், சம்பள உயர்வு எந்த அடிப்படையில் அமையும் என்று விளக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 136 சதவீதத்தில் இருந்து 139 சதவீதமாக உயர்த்தி, கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்க உத்தரவிட்டது. இதை ஏற்று, மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியையும் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் 3 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி, ஜூலை 1-ம் தேதி முதல் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 139 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்துக்கு உயர்த்தப்பட்ட அக விலைப்படி நிலுவைத் தொகை உடனடியாக பெறப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள இசிஎஸ் சேவை மூலம் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x