Published : 13 Oct 2017 09:09 AM
Last Updated : 13 Oct 2017 09:09 AM

6 ஐம்பொன் சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு: பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவு

திருவண்ணாமலையில் கடந்த மாதம் 21-ம் தேதி பறிமுதல் செய்யப்பட்டு, கும்பகோணம் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்ட ஐம்பொன் சிலைகளை, பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த செப்.21-ம் தேதி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எமலிங்கம் அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலான 6 ஐம்பொன் சிலைகளை விற்க 7 பேர் கொண்ட ஒரு கும்பல் முயன்றது. இத்தகவலை அறிந்து, அங்கு மறைந்திருந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், 6 ஐம்பொன் சிலைகள், 2 கார்கள், 2 இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 7 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 7 பேரும் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள், வாகனங்களை திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட 6 ஐம்பொன் சிலைகளை திருவண்ணாமலை நகர போலீஸார் நேற்று கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிலைகளை ஒப்படைத்தனர்.

ஐம்பொன் சிலைகளை வழக்கு விசாரணை முடியும் வரை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x