Published : 13 Oct 2017 08:54 AM
Last Updated : 13 Oct 2017 08:54 AM

விவசாயிகளுக்காக போராடிய இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது வழக்கு: சி.மகேந்திரன் உள்ளிட்டோர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் - விசாரணை நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக அக்கட்சியினர் நேற்று அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

தமிழக விவசாயிகளுக்காக கடந்த ஏப்ரல் மாதம் அம்பத்தூரில் நடுரோட்டிற்கு வந்து போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தேசிய நிர்வாக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.கண்ணன் உள்ளிட்ட 11 பேர் மீது அம்பத்தூர் போலீஸார் இதச 143 மற்றும் 188 ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அக்டோபர் 12-ம் தேதியான நேற்று நேரில் ஆஜராகுமாறு நல்லகண்ணு, மகேந்திரன் உள்ளிட்ட 11 பேருக்கும் அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

கண்டிப்பாக ஆஜராக வேண்டும்

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சி.மகேந்திரன், ஏ.எஸ்.கண்ணன், கார்த்திக், தஞ்சை புருஷோத்தமன், ஜெகந்நாதன், பெரியண்ணன், கணேஷ், பலராமன் ஆகிய 8 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். நல்லகண்ணு, லெனின், லோகேஷ் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. இவர்களின் சார்பில் அம்பத்தூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஒய்.கிருஷ்ணன், வழக்கறிஞர் தென்பாண்டியன் ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் அனிதா ஆனந்த் வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென உத்தரவி்ட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த சி.மகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் ஊழல் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக விவசாயிகளுக்காக போராடிய 93 வயதான கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர். தமிழக மக்களுக்கு இடையூறு செய்தது நாங்களா? இல்லை இந்த அரசா? என்பதை முதல்வரிடமே கேட்கிறோம்.

மத்திய அரசின் கைப்பாவை

வெள்ளையர் ஆட்சியில்தான் அம்மை, காலரா போன்ற கொள்ளை நோய் வந்து கொத்து, கொத்தாக மனிதர்களை சாகடித்தது. ஆனால் தற்போது கொள்ளை நோயாக மாறிவிட்ட டெங்குவைத் தடுக்க முடியாத இந்த அரசு எங்கள் மீது வழக்குப் போடுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x