Published : 13 Oct 2017 08:33 AM
Last Updated : 13 Oct 2017 08:33 AM
வங்கக்கடலில் வரும் 15-ம் தேதிவாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:
தற்போது மேற்கு திசைக் காற்று நன்கு வீசுவதால், தமிழகம் மற்றும் ஒட்டியுள்ள மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமானை ஒட்டியுள்ள பகுதியில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், அக்டோபர் 15-ம் தேதிவாக்கில், மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளது. அதுசம்பந்தமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகே, தமிழகத்துக்கான மழை வாய்ப்புகள் குறித்து கணிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT