Published : 28 Jun 2016 09:00 AM
Last Updated : 28 Jun 2016 09:00 AM

5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி: ஜூலை 11-ம் தேதி வேலைநிறுத்தம் - திட்டமிட்டபடி தொடங்கும் என கண்ணையா அறிவிப்பு

மத்திய அரசுடன் நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளதால், திட்டமிட்டபடி ஜூலை 11-ம் தேதி வேலைநிறுத்தம் தொடங்கும் என எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் என்.கண்ணையா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய கமிஷனில் உள்ள முரண்பாடுகளை களைய வேண் டும். அடிப்படை ஊதியம் ரூ.26 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 36 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி ஜூலை 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல்வேறு தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன.

எஸ்ஆர்எம்யு சார்பில் வேலை நிறுத்தம் தொடர்பான விளக்கக் கூட்டங்கள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. தாம்பரம் ரயில் நிலையம் அருகே நேற்று நடந்த கூட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் என்.கண் ணையா, பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஏழாவது ஊதியக் கமிஷனில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், 4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளோம். இதில், மத்திய அரசு ஊழியர்கள் 40 லட்சம் பேர் பங்கேற்பர். கடந்த 1974-ம் ஆண்டில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது ஏற்பட்ட தாக்கம், ஜூலை 11-ம் தேதியும் ஏற்படும். இதுவரை மத்திய அரசுடன் நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்துள்ளன.

ரயில்வேயில் தனியார்மயத்தை அனுமதித்தால் பயணிகள் கட் டணத்துக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தொகை ரத்தாகும். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். தனியார்மயமாக்குதலுக்கு மாற்றாக பொதுபட்ஜெட்டில் ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, ரயில்வே துறையை லாபத்தில் கொண்டு செல்லலாம். எனவே, மத்திய அரசு தனது கொள்கையை மாற்றிக் கொண்டு, தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.

ரயில் நிலையங்களில் நடக்கும் குற்றங்களை தடுக்கவும், பயணி களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x