Published : 03 Jul 2017 05:49 PM
Last Updated : 03 Jul 2017 05:49 PM

4 மாநகராட்சிகளில் ரூ.1436 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

வேலூர், கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 4 மாநகராட்சிகளில் ரூ.1436 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காட்டிய வழியில் செயல்படும் இந்த அரசின் சார்பாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த பின் வரும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டத்தின் கீழ் பின் வரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

1. வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான சத்துவாச்சாரி, அலமேல்மங்காபுரம் மற்றும் குணவட்டம் ஆகிய பகுதிகளில் 343 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் வேலூர் மாநகராட்சியிலுள்ள 2 லட்சத்து 62 ஆயிரம் பேர் பயன்பெறுவர்.

2. கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் 442 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தினால் 2 லட்சத்து 58 ஆயிரத்து 734 பேர் பயன்பெறுவர்.

3. திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பொன்மலை மற்றும் அபிசேகபுரம் பகுதிகளில் 325 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 454 பேர் பயன் பெறுவர்.

4. திருநெல்வேலி மாநகராட்சி இணைப்புப் பகுதிகளில் 326 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 857 பேர் பயன் பெறுவர்

5. அடையாறு உப்பங்கழி மற்றும் கழிமுகப் பகுதியின் 358 ஏக்கர் பரப்பளவில் சீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அடையாறு நதியின் தொடக்கம் முதல் முகத்துவாரம் வரையிலான 42 கிலோ மீட்டர் தூரத்தை 555 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்'' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x