Published : 09 Jan 2015 09:57 AM
Last Updated : 09 Jan 2015 09:57 AM

38-வது சென்னை புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது 21-ம் தேதி வரை நடக்க்கிறது

சென்னை வாசகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த 38-வது சென்னை புத்தக காட்சி சுமார் 750 அரங்குகளுடன் இன்று நந்தனம் ஒய். எம்.சி.ஏ. உடற்கல்வி விளையாட்டு மைதானத்தில் தொடங்குகிறது. இன்று தொடங்கி வரும் 21-ம் தேதி வரையிலான 13 நாட்கள் புத்தக காட்சி செயல்படும்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில் 38-வது ஆண்டாக நடத்தப்படும் சென்னை புத்தக காட்சி சுமார் 1.80 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகக் காட்சியில் 750 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. 500 தமிழ் பதிப்பாளர்கள் அரங்குகள், 200 ஆங்கில பதிப்பாளர்கள் அரங்குகள், 20 ஊடகப் பதிப்பாளர்கள் அரங்குகள், 30 விளம்பரதாரர் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

350 பதிப்பகங்களின் சார்பாக சுமார் 5 லட்சத்துக்கும் மேலான புத்தகங்கள் இடம் பெற உள்ளன. புதிய வரவாக சுமார் 30 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெறுகின்றன.

மன்னர்கள் பெயரில் நுழைவாயில்

ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக காட்சியின் நுழைவாயில் எழுத்தாளர்கள், பிரபல புத்தகங்களின் பெயர் மற்றும் அறிஞர்கள் பெயர்களில் வைக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு தமிழ் மன்னர்கள் பெயர் நுழைவாயில்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. ராசேந்திர சோழன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் நெடுஞ்செழியன், வீரபாண்டிய கட்டப்பொம்மன், கரிகால் பெருவளத்தான், மகேந்திர பல்லவன், ராசராச சோழன் ஆகிய பெயர்களில் ஐந்து நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிய ஏற்பாடாக சுமார் 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் வை-ஃபை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுழைவு கட்டணம்

புத்தக காட்சிக்கு செல்ல நுழைவு கட்டணம் ரூ. 10. 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி இலவசம். இந்த ஆண்டு முதன் முறையாக ரூ. 50 மதிப்புள்ள டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் கொண்டு எத்தனை முறை வேண்டுமானாலும் புத்தக காட்சி அரங்குக்குள் சென்று வரலாம். இது தினமும் வரக்கூடிய வாசகர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். சென்னையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 7 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வசதிக்காக நுழைவாயிலில் இருந்து அரங்கம் இருக்கும் இடத்துக்கு செல்ல 5 சிறியரக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 75 இலவச கழிப்பிடங்கள் மற்றும் இலவச குடிநீருக்காக தினமும் 500 தண்ணீர் கேன்கள் தயார் நிலையில் உள்ளன.

நந்தனம் கல்லூரியில் சுமார் 3 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் செயலாளர் புகழேந்தி கூறும்போது, ‘‘சென்னை புத்தக காட்சியில் இந்த ஆண்டு 15 லட்சம் பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு சுமார் ரூ.15 கோடி வசூலானது. இந்த ஆண்டு அத்தொகை 20% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x