Published : 20 Sep 2015 09:25 AM
Last Updated : 20 Sep 2015 09:25 AM

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம்: தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தற்போது நடைபெற்று வருகிறது. இதையொட்டி செப்டம்பர் 20-ம் தேதி (இன்று) வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் சிறப்பு முகாம் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

வரும் ஜனவரி 1-ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் புதிய வாக்காளர்கள், தங்கள் பெயரை சேர்க்க இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் பெயர் நீக்கம், திருத்தம், இடமாற்றம் தொடர்பாக உரிய படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வாக்காளர்கள் வழங்கலாம்.

அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சிறப்பு முகாம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி யான ஆட்சியரை தொடர்பு கொள்ளலாம். சென்னையில் மாநகராட்சி ஆணையரை தொடர்பு கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய ஆன்-லைன் மூலமும் (elections.tn.gov.in/eregistration) விண்ணப்பிக்கலாம். இந்த வசதியை வாக்காளர்கள் பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x