Published : 28 Jun 2016 07:30 PM
Last Updated : 28 Jun 2016 07:30 PM
வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் வழக்குகள் தேங்குவதை தடுக்க பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களை நிபந்தனையின்றி திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் அவர்களின் தொழில் தர்மத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதால் வழக்கறிஞர் சமூகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதை மறுக்க முடியாது. ஆனால், இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக எண்ணி வழக்கறிஞர்கள் சட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றம் கொண்டு வந்துள்ள திருத்தங்கள், தங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். இந்த விஷயத்தில் நீதிமன்றங்களின் மாண்பும், வழக்கறிஞர்களின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
வழக்கறிஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு காரணமாக உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இது நீதிக்காக காத்திருக்கும் பலரையும் பாதிக்கும். எனவே, வழக்கறிஞர்களை உடனே அழைத்து பேசி உயர் நீதிமன்ற நிர்வாகம் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT