Last Updated : 30 Dec, 2016 12:44 PM

 

Published : 30 Dec 2016 12:44 PM
Last Updated : 30 Dec 2016 12:44 PM

வறுமையில் வாடும் முல்லை பெரியாறு தியாகி குடும்பம்

முல்லை பெரியாறு அணை பிரச்சினையின்போது போராட்டத்தில் உயிர்நீத்த சி.ராமமூர்த்தியின் குடும்பத்தினர் வறுமையில் வாடுகின்றனர்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி கேரள அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் சீலையம்பட்டியை சேர்ந்த சேகர், சின்னமனூர் சி.ராமமூர்த்தி, தேனி ஜெயப்பிரகாஷ் ஆகிய 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

சின்னமனூர் சி.ராமமூர்த்தியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் என்பதால் அவரது நண்பர்கள் நகர் முழுவதும் ராமமூர்த்தியின் நினைவு அஞ்சலி போஸ்டரை ஒட்டியிருந்தனர்.

இதுகுறித்து ‘தி இந்து’ விடம் சின்னமனூர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே குடியிருந்து வரும் சி.ராமூர்த்தி யின் மூத்த சகோதரி செல்வி கூறியதாவது: எனது தந்தைக்கு ஒரு மகள், 3 மகன்கள். இதில் நான் மூத்தவள் எனது தம்பி ராமமூர்த்தி 3வதாக பிறந்தவன். அவனுக்கு திருமணம் ஆக வில்லை. எனது 2-வது தம்பியுடன் சேர்ந்து சின்னமனூர் கருங்கட்டான்குளத்தில் பித்தளை பாத்திரம் செய்யும் தொழிலில் ராமமூர்த்தி ஈடுபட்டு வந்தான். எங்களது பூர்வீக சொத்துக்களை விற்று அதில் கிடைத்த பணத்தை தனது நண்பர்களுடன் இணைந்து சால்பு நண்பர்கள் என்ற குழுவை தொடங்கியபோது அந்த குழுவின் கட்டிடத்திற்காக 3 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி கொடுத்தான்.

மேலும் தான் சேமித்து வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தை சால்பு நண்பர்கள் குழு மூலம் வங்கியில் செலுத்தி அதன் மூலம் கிடைக்கும் வட்டி பணத்தை வைத்து சால்பு குழுவின் மூலம் ஏழை பள்ளி குழந்தைகளுக்கு ஆண்டுதோறும், உதவி செய்து வந்தான். முல்லை பெரியாறு அணை பிரச்சினையின் போது மனவேதனையுடன் காணப்பட்டவன். பெரியாறு அணையை காக்க அனைத்து தரப்பு மக்களும் ஒன்று சேர வேண்டும் என்று கூறி துண்டு பிரசுரம் அச் சடித்து பொதுமக்களிடம் கொடுத்து வந்தான். பெரியாறு அணையில் 152 அடியாக நீர்தேக்க வேண்டும். அதற்காக எனது உயிரை நீக்கி கொள்கிறேன் என்று கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி கடிதம் எழுதி தனது சட்டை பையில் வைத்து கொண்டு அன்றைய தினம் சின்னமனூரில் கேரள அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் அரளி விதையை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது அதிமுக, மதிமுக, திமுக, நாம்தமிழர் என அரசியல் கட்சியினர் சுமார் ரூ.3 லட்சம் வரை பணம் கொடுத்தனர். அதன் பின்னர் யாரும் எங்களை வந்து சந்திக்கவில்லை.

எனது கணவர் இறந்த பின்னர் என் ஒரே மகளை 2-வது தம்பிக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டு தனியார் பள்ளி வாகனத்தில் நடத்துநராக மாதம் ரூ.4 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்து வருகின்றேன். எனக்கு என்று எந்த சொத்தும் இல்லை, மாமனார் வீட்டில் வசித்து வருகிறேன். குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை விதவை பணம் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் இதுவரை பணம் வரவில்லை, வறுமையில் வாடும் எனக்கு தமிழக அரசு அல்லது அரசியல் கட்சியினர் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x