Published : 29 Nov 2014 08:57 AM
Last Updated : 29 Nov 2014 08:57 AM

ரூ.27 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் வாங்க தமிழக அரசு திட்டம்: 4 தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலை நிர்ணயம்

நடப்பு நிதியாண்டில் ரூ.27 ஆயிரத்து 147 கோடிக்கு மின்சாரம் வாங்க தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதில் 4 தனியார் நிறுவனங்களிடம் இருந்து மட்டும் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் மின் பற்றாக் குறையைப் போக்க, பல்வேறு திட்டங்களை தமிழக மின் வாரியம் மேற்கொண்டுள்ளது. தனியார் காற்றாலைகள், மத்திய மின் நிலையங்கள், சுயதேவை மின் உற்பத்தி தனியார் நிலையங்கள், சூரிய சக்தி, தனியார் மின் விற்பனை நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து மின்சாரத்தை வாங்கி வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்துக்கு விநியோகித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில், மின்சாரம் வாங்குவதற்கான செலவாக ரூ.27 ஆயிரத்து 147 கோடியை மின் வாரியம் மதிப்பிட்டுள்ளது. இதில் மத்திய மின் நிலையங்கள், காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையங்கள், வெளி மாநில மின் விற்பனை நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து வாங்கும் விலையைவிட, குறிப்பிட்ட 4 தனியார் மின் நிலையங்களுக்கு மட்டும் அதிகபட்ச விலை நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் வாரியத்துக்கு கொள்முதல் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.

மத்திய மின் நிலையங்களான நெய்வேலி, கல்பாக்கம், வல்லூர், தேசிய அனல் மின் கழகத்தின் ராமகுண்டம் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலையம் ஆகிய வற்றில் இருந்து சராசரியாக ஒரு யூனிட் ரூ.2.94 மற்றும் ரூ.3.85 என்ற விலைக்கு வாங்கத் திட்ட மிட்டுள்ளது. காற்றாலை, சூரிய சக்தி, உயிரி தொழில்நுட்பம் போன்ற தனியார் மின் நிலையங் களில் இருந்து ரூ.4.26-க்கும், தனியார் மின் விற்பனை நிறுவனங்கள் மற்றும் சுயதேவை மின் உற்பத்தி தனியார் நிறுவனங்க ளிடம் இருந்து ரூ.4.76-க்கும் மின்சாரம் வாங்கப்படுகிறது.

இந்நிலையில், தனியார் மின் நிறுவனங்களாக சாமல்பட்டி, மதுரை பவர் கார்ப்பரேஷன், பிள்ளைபெருமாள் நல்லூர் மின் நிறுவனம் மற்றும் ஜி.எம்.ஆர். ஆகிய 4 நிலையங்களில் இருந்து ஒரு யூனிட்டுக்கு அதிகபட்சமாக ரூ.15.14 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. 4 நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் ரூ.1,208 கோடிக்கு வெறும் 798 மில்லியன் யூனிட் மட்டும் வாங்கப்படுகிறது.

எஸ்.டி.சி.எம்.எஸ்., லேன்கோ மற்றும் பயனிர் ஆகிய நிறுவனங் களிடம் யூனிட்டுக்கு ரூ.5.14-க்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. இந்த நிறுவனங்களில் இருந்து 2,865 மில்லியன் யூனிட் மின்சாரத்தை ரூ.1,473 கோடிக்கு வாங்க மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்தம் 65 ஆயிரத்து 870 மில்லியன் யூனிட் மின்சாரம், ரூ.27 ஆயிரத்து 147 கோடியே 5 லட்சத்துக்கு வாங்கு வதாக தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு மின் வாரியம் விவரங்களை அளித்துள் ளது.

தமிழக மின் வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55 சதவீதத்தை மின்சாரம் வாங்குவதற்கே செலவி டுவதால்தான், நஷ்டம் அதிகரித்து வருவதாக மின் நுகர்வோரும், தொழில்துறையினரும் தெரிவிக் கின்றனர். தனியார் நிறுவனத்தில் மின்சாரம் வாங்குவதற்கு ஒழுங்கு முறை ஆணையத்தில் வாரியம் முறைப்படி அனுமதி பெற்று, நியாயமான விலை நிர்ணயித்து வாங்க வேண்டும்.

ஆனால், ரூ.5.50-க்கு மேல் தனியாரிடம் மின்சாரம் வாங்கினால் நஷ்டம் அதிகரிக்கும் என்று ஒழுங்கு முறை ஆணையம் எச்சரித்த நிலை யிலும், கடந்த 2 ஆண்டுகளாக குறிப்பிட்ட 4 நிறுவனங்களிடம் இருந்து எந்த அத்திவாசியமும் இல்லாத நிலையில், அதிகபட்ச மாக ரூ.15-க்கு மின்சாரம் வாங்கப்படு கிறது. இதனால், ரூ. 400 கோடிக்கு வாங்க வேண்டிய மின்சாரத்தை ரூ.1,200 கோடிக்கு வாங்கி நஷ்டத்தை அதிகரிப்பதாக மின் துறையினர் மீது தொழிற்துறை யினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x