Published : 06 Oct 2016 08:42 AM
Last Updated : 06 Oct 2016 08:42 AM
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக அணைகளான கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கடந்த மாதம் 5-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை ஏற்று காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், அம்மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டு, தமிழக லாரி, பேருந்துகள் எரிக்கப்பட்டு பல கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தேவை அதிகம் தேவைப்படுவதால், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இதை கர்நாடக அரசு ஏற்க மறுத்த நிலையில், உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு கட்டாயம் தினமும் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது.
இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் கர்நாடக அணைகளில் இருந்து 6,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் மாலை பிலிகுண்டுலுவில் 9,700 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை நீர்வரத்து 749 கன அடியாக இருந்தது, காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, 4,013 அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர் மட்டம் 74.65 அடியாகவும், இருப்பு 36.83 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக தினமும் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT