Published : 20 Sep 2015 06:46 PM
Last Updated : 20 Sep 2015 06:46 PM

மதிமுகவினர் யாரையும் நாங்கள் அழைக்கவில்லை: ஸ்டாலின்

மதிமுகவினர் யாரையும் நாங்கள் அழைக்கவில்லை என்றும், மாற்று கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் சேருபவர்களிடம் காரணம் கேட்க முடியாது என்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை தென் மாவட்டங்களில் 'நமக்கு நாமே' என்ற பிரச்சார பயணத்தை ஸ்டாலின் மேற்கொள்கிறார். அதற்காக சென்னையில் இருந்து இன்று காலை விமானத்தில் மதுரை புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறும்போது, "நமக்கு நாமே என்ற பயணத் திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக செல்ல இருக்கிறேன்.

சட்டப்பேரவை தொகுதி வாரியாக மக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்க இருக்கிறேன். கடந்த கால திமுக அரசின் சாதனைகளயும், கடந்த நான்கரை ஆண்டு கால அதிமுக அரசின் செயலற்ற தன்மையையும் மக்களிடம் ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்வேன்.

மதிமுகவில் இருந்து மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தாங்களாகவே முன்வந்து சொந்த விருப்பத்தின் பேரில் திமுகவில் இணைகின்றனர். கட்சியில் சேருபவர்களிடம் எதற்காக சேருகிறீர்கள் என காரணம் கேட்க முடியாது.

மதிமுகவினர் யாரையும் நாங்கள் அழைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு எங்கள் இல்லத் திருமண விழாவில் வைகோ என்ன பேசினார், இப்போது என்ன பேசுகிறார் என்பதை அனைவரும் அறிவர். யாருடைய நிர்பந்தத்தால் அவர் மாறிமாறி பேசுகிறார் என்பது தெரியவில்லை. இதற்கான காரணத்தை அவரிடம்தான் கேட்க வேண்டும்'' என்றார் ஸ்டாலின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x