Published : 16 May 2016 09:18 PM
Last Updated : 16 May 2016 09:18 PM

புதுச்சேரியில் 84 சதவீத வாக்குப்பதிவு: பெண்களே அதிகமாக வாக்களித்தனர்

தொடர் மழையிலும் புதுச்சேரியில் 84 சதவீத வாக்குப்பதிவானது. ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்களித்திருந்தனர்.

புதுச்சேரியில் யூனியனில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க., பாரதீய ஜனதா, பா.ம.க., மக்கள் நல கூட்டணி என 6 முனை போட்டி இருந்தது. புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் 344 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் 9 லட்சத்து 41ஆயிரத்து 935 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 47ஆயிரத்து 444. பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 94 ஆயிரத்து 412. மூன்றாம் பாலின வாக்காளர்கள் 79.

4 பிராந்தியங்களிலும் சேர்த்து காலை 9 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 13 சதவீத வாக்குகள் பதிவானது.அதன்பிறகு மழை பொழிவால் வாக்கு எண்ணிக்கை சதவீதம் குறைந்தது. 10 மணிக்கு 15.44 சதவீத வாக்குகள் பதிவானது. 11 மணிக்கு 18.27 சதவீத வாக்குகள் பதிவானது. மழையால் காலை 11.30 வரை வாக்குப்பதிவில் சற்று தொய்வு ஏற்பட்டது.

12 மணிக்கு 32.16 சதவீத வாக்குகள் பதிவானது. மதியம் 1 மணிக்கு 44.68 சதவீத வாக்குகள் பதிவானது. மதியம் 2 மணிக்கு 54.64 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. மதியம் 3 மணிக்கு 68.68 சதவீத வாக்குகளும், மாலை 4 மணிக்கு 71.34 சதவீத வாக்குகளும், மாலை 5 மணிக்கு 81.06 சதவீத வாக்குகளும் பதிவானது. மாலை 6 மணிக்கு வாக்கு சதவீதம் 84 சதவீதத்தை எட்டியது. பெண்களே அதிகளவு வாக்களித்துள்ளனர். பெண்கள் 85 சதவீதமும், ஆண்கள் 82 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.

கடந்த பேரவைத்தேர்தலில் புதுச்சேரியில் மொத்தமாக 85.52 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மழைபொழிவுதான் கடந்தமுறையை விட வாக்குகள் பதிவு குறைவுக்கு ஓர் காரணமாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x