Published : 14 Aug 2015 01:01 PM
Last Updated : 14 Aug 2015 01:01 PM
‘பி’ பிரிவு ஆராய்ச்சிப் படிப்பை நிரந்தரமாக நீக்குவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தி வந்த ‘பி’ பிரிவு ஆராய்ச்சிப் படிப்பை நீக்க வலியுறுத்தி முழுநேர ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ‘பி’ பிரிவு ஆராய்ச்சிப் படிப்பை நிரந்தரமாக நிறுத்துவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த படிப்பு தொடர்பான சில கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 100-க்கும் அதிகமான முழுநேர ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுவாயில் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும்போது, "எங்களது போராட்டத்தைத் தொடர்ந்து ‘பி’ பிரிவு ஆராய்ச்சிப் படிப்பை நீக்குவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டி நிரந்தரமாக நீக்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.
ஏற்கெனவே படித்து முடித்து வெளியேறிய மாணவர்களின் சான்றிதழில் ‘பி’ பிரிவு என்பதை வேறுபடுத்திக் காட்டுமாறும், இந்த ஆராய்ச்சி முடித்தவர்களுக்கு, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டும் உரிமை வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தி வருகிறோம்.
எங்களது கோரிக்கை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரையிலும் எவ்வித முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறது. இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுட்டுள்ளோம்" என்றனர்.
போராட்டம் இரவு 7 மணி வரை நீடித்தது. பல்கலைக்கழக நிர்வாகம் தங்களது போராட்டம் தொடர்பாக உறுதியான அறிவிப்பை வெளியிடும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களுக்கு இன்று முதல் (ஆக.14) பல்கலைக்கழக நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT