Published : 16 May 2016 07:32 AM
Last Updated : 16 May 2016 07:32 AM

பிளஸ் 2 மாணவர்கள்: விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுத் துறை அறிவிப்பு

பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு மே 17, 18-ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி நிறைவடைந்தது. தேர்வு முடிவுகள் வரும் 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணி முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மே 17, 18 ஆகிய இரு நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாள் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை தெளிவாக முடிவு செய்துகொண்டு அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிப்போர், அதே பாடத்துக்கு மதிப்பெண் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்கக் கூடாது. விடைத்தாள் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

கட்டணம் எவ்வளவு?

விடைத்தாள் நகல் கட்டணம் மொழித்தாளுக்கு ரூ.550, ஆங்கிலம் தாளுக்கு ரூ.550. இதர பாடங்களுக்கு தலா ரூ.275. மறுகூட்டல் கட்டணம் மொழித்தாள், ஆங்கிலம், உயிரியல் ஆகியவற்றுக்கு தலா ரூ.305 (இரு தாள்கள் சேர்த்து), மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205.

விண்ணப்பிக்க உள்ள பள்ளியிலேயே இக்கட்டணத்தை பணமாக செலுத்த வேண் டும். விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப் பாக வைத்துக்கொள்ள வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவும், மறுகூட்டல் முடிவுகளை அறியவும் இயலும். விடைத் தாள் நகலை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதள முகவரி, நாள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

அரசு தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.nic.in) பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 19-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேர்வர்கள் தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 21-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x