Published : 06 Jan 2015 07:47 PM
Last Updated : 06 Jan 2015 07:47 PM

பாம்பன் ரயில் பாலத்தில் கர்டர்கள் மாற்றும் பணி துவக்கம் ரயில்களின் நேரம் மாற்றம்

பாம்பன் ரயில் பாலத்தில் இரும்பு கர்டர்கள் மாற்றும் பணி செவ்வாய்கிழமை துவங்கியது.

பாம்பன் பாலம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரிணைப்பு கடற்பகுதிகளில் இந்தியாவோடு ராமேஸ்வரம் தீவை இணைக்கிறது. இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கடல் பாலம் இதுதான். இந்த பாம்பன் பாலம் 2.3 கி.மீ. நீளம் கொண்டது. மேலும் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் ஆகும்.

கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் இந்த ரயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேய என்ஜினீயர் ஸ்கெர்சர் கட்டியதால் இந்த ரெயில் பாலத்துக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.

கடந்த 1914ம் ஆண்டில் பாம்பன் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு தற்போது 100 ஆண்டுகளுக்கும் மேல் கடலில் நிலைகொண்டுள்ள இப்பாலத்தின் உறுதி தன்மை குறித்து ரயில்வே அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்தில் தென்னக ரயில்வே முதன்மை பொறியாளர் சுயம்புலிங்கம், பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தின் உறுதி தன்மை குறித்து டிராலி மூலம் ஆய்வு செய்து பின்னர் செய்தியாளர்களிடம் பாலத்தில் சேதமடைந்துள்ள 28 இரும்பு கர்டர்களை மாற்ற ரயில்வே நிர்வாகம் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என தெரிவித்தார்.

இந்நிலையில் புதிய கர்டர் அமைக்கும் பணி செவ்வாய்கிழமை துவங்கியது. முதற்கட்டமாக 28 இரும்பு கர்டர்கள் மாற்றப்பட உள்ளன. அடுத்த கட்டமாக 34 கர்டர்களும், பின்னர் பாலத்தில் உள்ள அனைத்து கர்டர்களும் படிப்படியாக மாற்றப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கர்டர்கள் மாற்றும் பணியினால் ஜனவரி 9, 13, 20 ஆகிய தேதிகளில் மதுரை–ராமேசுவரம் பயணிகள் ரயில்கள் மண்டபத்தில் 26 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். இதேபோல் திருப்பதி–ராமேசுவரம் ரயில் ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் மண்டபத்தில் 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். இந்த இரண்டு ரயில்கள் தவிர மற்ற ரயில்களின் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x