Published : 30 Dec 2016 09:07 AM
Last Updated : 30 Dec 2016 09:07 AM

பழைய ரூபாய் நோட்டுகள் தருவதாக செங்கற்களை கொடுத்து மோசடி செய்த 2 பேர் கைது

புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு பதிலாக அதிக அளவில் பழைய ரூபாய் நோட்டுகள் தருவதாக கூறி செங்கற்களை கொடுத்து மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் யுவராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இவரது நண்பர் குன்றத்தூர், கெருகம்பாக்கத்தை சேர்ந்த செல்வம்(36). சமையல் வேலை செய்து வருகிறார். ‘புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கொடுத்தால், அதைவிட அதிக மதிப்பில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை நண்பர் ஒருவர் மாற்றிக் கொடுப்பதாக யுவராஜிடம் தெரிவித்திருக்கிறார் செல்வம். இதை நம்பிய யுவராஜ், கடந்த 27-ம் தேதி மாலையில் குன்றத்தூர் அருகே தரப்பாக்கம் என்ற இடத்துக்கு காரில் ரூ.5 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் வந்தார்.

அங்கு தனது நண்பர்களுடன் வந்த செல்வம், யுவராஜிடம் இருந்து ரூ.5 லட்சம் பணப் பையை வாங்கி கொண்டு, மற்றொரு பையை யுவராஜிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டார். யுவராஜ் பையைப் பிரித்து பார்த்தபோது, அதில் செங்கற்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் யுவராஜ் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, செல்வம் மற்றும் அவரது நண்பர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு வீட்டுக்கு வந்த செல்வத்தையும், அவரது நண்பர் கார்த்திக் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொஞ்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x