Published : 23 Jan 2015 08:31 AM
Last Updated : 23 Jan 2015 08:31 AM
தேனி மாவட்டம், தேவாரம், பொட்டிப்புரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கத் தடை விதிக்கக் கோரி வைகோ தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகள் மற்றும் அணுசக்தி கழகத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
வைகோ தாக்கல் செய்த பொது நல மனு, நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
வைகோ நேரில் ஆஜராகி வாதிடும்போது, ‘நியூட்ரினோ திட்டத்தால் தேனி பகுதியில் நில வளம் அழியும். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பசுமைத் தொடர்களுக்கு பேரழிவு ஏற்படும். விவசாயம், தண்ணீர், வன விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும். மனித உயிர்களுக்கு ஆபத்து நேரிடும்.
ஆய்வு மையம் அமைய உள்ள பகுதியில் இருந்து 50 கி.மீ. தொலைவில் முல்லை பெரியாறு அணையும், 60 கி.மீ. தொலைவில் கேரள மாநிலத்தில் இடுக்கி அணையும் அமைந்துள்ளன.
மக்களை பாதிக்கச் செய்யும் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு எப்போதும் தமிழகத்தை தேர்வு செய்கிறது. எனவே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என்றார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர். சுவாமிநாதன் வாதிடும்போது, ‘இந்த மனு இன்றுதான் விசாரணைக்கு வருகிறது. பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும். அதற்குள் திட்டத்தை நிறைவேற்ற முடியாது. எனவே, இடைக்கால தடையோ, தற்போதைய நிலை தொடரவோ உத்தரவிட வேண்டியது இல்லை’ என்றார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே. செல்லப்பாண்டியன் வாதிடும்போது, ‘நியூட்ரினோ திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம். மாநில அரசுக்குத் தொடர்பில்லை’ என்றார்.
இதையடுத்து, மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவித்த நீதிபதிகள், மனுவுக்கு மத்திய சுற்றுச்சூழல்- வனத் துறை செயலர், விஞ்ஞானம்- தொழில்நுட்பத் துறை செயலர், அணுசக்தி கழகத் தலைவர், தமிழக சுற்றுச்சூழல்- வனத் துறை செயலர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பிப். 6-ம் தேதிக்குள் பதில் அளிக்கும் வகையில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
பின்னர், வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விஞ்ஞான ஆய்வுக்காக தமிழர்கள் பலியாடுகள் அல்லர். பல இடங்களில் முயற்சி செய்து நிறைவேற்ற முடியாத திட்டத்தை தேனியில் செயல்படுத்துகின்றனர். மற்றவர்கள் விஞ்ஞான அறிவு பெற நம்மை அழிப்பதா? இந்தத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து ரூ. 1,500 கோடியை ஒதுக்கியுள்ளது. தாமதமில்லாமல் இந்தத் திட்டத்தை தடுக்க வேண்டும் என்றார்.
வைகோவுக்கு ஆங்கிலம் தெரியாதா?
விசாரணை முடிந்த நிலையில், மத்திய அரசு வழக்கறிஞர் ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதிகளிடம், ‘ஆங்கிலம், தமிழில் புலமை பெற்றவர் வைகோ. அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழில் கையெழுத்திட்டுள்ளார். உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்பவர், தமிழில் கையெழுத்திட்டால், ‘ஆங்கிலம் தெரியாது என்பதால், மனுவில் எழுதப்பட்டிருப்பதை மற்றவர்கள் விளக்க நான் தெரிந்து கொண்டேன்’ எனத் தனியாக ஒரு படிவத்தில் கையெழுத்திட வேண்டும். இது, 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. அந்தப் படிவத்தில் கையெழுத்திட மறுத்தால், மனுவுக்கு வழக்கு எண் வழங்கப்படாது. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்’ என்றார்.
இதையடுத்து நீதிபதி தமிழ்வாணன், ‘தமிழில் கையெழுத்திடுவது தவறு அல்ல. கையெழுத்துக்கு மொழி கிடையாது. இந்த முறையை மாற்ற வேண்டும். அது குறித்து பரிந்துரை செய்யப்படும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT