Published : 14 Aug 2015 05:46 AM
Last Updated : 14 Aug 2015 05:46 AM

தூக்கில் தொங்கியதால்தான் சசிபெருமாள் மரணமடைந்தார்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தூக்கில் தொங்கியதால்தான் சசிபெருமாள் மரணமடைந்தார் என்று அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சசிபெருமாளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவரது மூத்த மகன் விவேக் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவுக்குப் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

உண்ணாமலைக் கடை சந்திப்பில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி ஜூலை 31-ம் தேதி மதுக்கடைக்கு எதிரான இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், செல்போன் கோபுரத்தில் ஏறி தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரியவந்தது. அன்றைய தினம் சம்பவ இடத்துக்கு வந்த ஜெயசீலனும், சசிபெருமாளும் கயிறு உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு செல்போன் கோபுரத்தில் ஏறினர்.

செல்போன் கோபுரத்தில் இருந்த அவர்களைக் காப்பாற்ற காவல்துறையினர் முற்பட்டபோது, ‘யாராவது எங்களைக் காப்பாற்ற முற்பட்டால் தீக்குளிப்போம்’ என்று எச்சரித்தனர். இதற்கிடையே தீயணைப்புத் துறையினரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கும்படி போராட்ட அமைப்பாளர்களிடம் அதிகாரிகள் பலமுறை வேண்டுகோள் விடுத்தனர்.

குறிப்பிட்ட மதுக்கடையை அங்கிருந்து மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர், எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்த பிறகு, போராட்ட அமைப்பாளர் ராபர்ட்குமார் அதனை ஒலிபெருக்கியில் அறிவித்தார். அதன்பிறகே தீயணைப்புத் துறையினர் செல்போன் கோபுரத்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது, செல்போன் கோபுரத்தின் உச்சியில் சசிபெருமாள் அமர்ந்த நிலையில் இருந்தார். அவரது ஒரு கால் மடங்கிய நிலையிலும், மற்றொரு கால் தொங்கிக்கொண்டும் இருந்தது. கயிற்றின் ஒரு முனை அவரது கழுத்திலும், மறுமுனை செல்போன் கோபுர கம்பியிலும் கட்டப்பட்டிருந்தது. அவரது மூக்கில் இருந்தும், மார்புப் பகுதியில் இருந்தும் ரத்தம் வழிந்தது. சசிபெருமாளின் கழுத்தில் சுற்றியிருந்த கயிற்றை அறுத்து தீயணைப்புத் துறையினர் அவரை கீழே இறக்கினர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சசிபெருமாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.

பின்னர், நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. தூக்கில் தொங்கியதால்தான் சசிபெருமாளின் மரணம் நிகழ்ந்துள்ளது என்று அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. சசிபெருமாள் மரணம் பொதுமக்கள் மத்தியில் நிகழ்ந்துள்ளது. எனவே, இந்த சம்பவத்தில் மர்மம் இல்லை என்பதால் இதுகுறித்து நீதி விசாரணை நடத்தத் தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி, தன்னையும் இவ்வழக்கில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். மனுதாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்ட நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், வழக்கு விசாரணையை வரும் 31-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x