Published : 06 Jan 2015 02:03 PM
Last Updated : 06 Jan 2015 02:03 PM
தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 21 ஆட்டோக்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 46 வெளிநாட்டுப் பயணிகள் கன்னியாகுமரி வந்தனர்.
அமெரிக்கா, அர்ஜென்டினா, தென்ஆப்ரிக்கா, ஸ்காட்லாந்து, ஸ்லோவேனியா, நியூசிலாந்து, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 46 சுற்றுலாப் பயணிகள், 21 ஆட்டோக்களில் சென்னையில் இருந்து கடந்த 29-ம் தேதி தங்கள் பயணத்தை தொடங்கினர்.
புதுச்சேரியிலிருந்து தஞ்சை, மதுரை ஆகிய இடங்களுக்கு சென்றனர். ஜனவரி 2-ம் தேதி தூத்துக்குடிக்கு சென்ற இக்குழுவினர் அங்குள்ள பழைய மற்றும் புதிய துறைமுகங்கள், புனித தஸ்நேவிஸ் மாதா திருத்தலம், மணப்பாடு கலங்கரை விளக்கம், சிலுவைநாதர் ஆலயம் ஆகியவற்றை பார்த்தனர். பின்னர் திருநெல்வேலி வழியாக நேற்று கன்னியாகுமரி வந்தனர்.
இக்குழுவினருக்கு கடற்கரை சாலையில் உள்ள சொகுசு தங்கும் விடுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தங்களது ஆட்டோ சுற்றுப் பயணம் புது அனுபவமாக இருந்ததாகவும், இந்தியாவின் தொன்மையான கலாச்சாரம் மற்றும் தமிழக சுற்றுலாத் தலங்களின் பெருமையை அறிய இப்பயணம் உதவுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரியில் நேற்று அவர்கள் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, பகவதியம்மன் கோயில் மற்றும் முக்கிய சுற்றுலா பகுதிகளைப் பார்த்து ரசித்தனர். இன்று திருவனந்தபுரம் செல்லும் அவர்கள், அங்கிருந்து சென்னை சென்று பின்னர் தங்கள் நாடுகளுக்கு திரும்புகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT