Published : 18 Jan 2017 04:32 PM
Last Updated : 18 Jan 2017 04:32 PM
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நேற்று நடைபெற்ற தியாகராஜர் ஆராதனை விழாவில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியது:
திருவையாறில் பாட்டுக்காக எடுக்கும் விழா வெற்றிகரமாக நடந்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், தமிழகத்தில் மாட்டுக்காக எடுக்கும் விழா நடைபெறாமல் போனதில் எனக்கு அதிர்ச்சி. ஆனாலும், தடையைப் பற்றி கவலைப்படாமல் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதற்கு அடையாளமாக ஜல்லிக்கட்டு நடத்திய அத்தனை இளைஞர்களுக்கும் என்னுடைய பாராட்டுகள். அவர்கள் தேசிய விரோதிகள் அல்லர், தீவிரவாதிகள் அல்லர். மாட்டுக்கு ஆதரவாளர்கள். அவர்கள் மீது தடியடி நடத்தியது தேவையில்லாதது. விழாக்காலம் முடிவடைந்துவிட்டது. எனவே, அவர்கள் மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யாமல், உற்சாகத்துக்கு பாராட்டு தெரிவித்து, அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
போராடிய இளைஞர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விரைவாக தீர்ப்பு வர வேண்டும். தீர்ப்பு நல்லதாக இருக்க வேண்டும். வாய்ப்பு இருந்தால் மத்திய அரசு தலையிட்டு ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யும்.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் இரண்டு கொள்கை கள் அடிப்படையில்தான் தொடங்கப்பட்டன. ஒன்று பிரிவினைவாதம், இன்னொன்று நாத்திகம். ஆனால், தேசிய சிந்தனையோடு வாழ்ந்தவர் எம்ஜிஆர்.
குடும்ப அரசியல், உத்தரப்பிரேதசமாக இருந்தாலும், தமிழ்நாடாக இருந்தாலும் அது மக்களால் ஏற்றுகொள்ளப்படமாட்டாது. புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் கூறியதைப்போல, தமிழக அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்யவில்லை. மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுடனும் நல்லுறவையே கடைபிடித்து வருகிறது. தமிழ்நாட்டின் மீது கூடுதல் கவனம் செலுத்தி, நல்லுறவுடன் செயல்பட்டு வருகிறது. நடராஜன் என்ன பொருளில் அவ்வாறு தெரிவித்தார் என்பது புரியவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT