Published : 06 Oct 2016 09:44 AM
Last Updated : 06 Oct 2016 09:44 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 குறைவு: ஒரே நாளில் விற்பனை 25% அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தால் சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.600 குறைந்தது. இதனால் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து உள்ளூரில் அதன் விலையில் மாற்றம் ஏற்படும். அதன்படி கடந்த சில மாதங்களாக தங்கத்தில் முதலீடு அதிகரித்து வந்ததால் அதன் விலை உயர்ந்து வந்தது. இதற்கிடையே, சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் நேற்று திடீரென சரிவு ஏற்பட்டது. இதனால், உள்ளூரில் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 குறைந்து ரூ.22 ஆயிரத்து 816-க்கு விற்கப்பட்டது. 22 காரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 852-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 927-க்கு விற்கப்பட்டது.

தங்கத்தின் விலை குறைந்ததைத் தொடர்ந்து சென்னையில் தியாகராயநகர், புரசைவாக்கம், பிராட்வே, மயிலாப்பூர், தாம்பரம், வடபழனி உள்ளிட்ட இடங்களிலும், மற்ற மாவட்ட தலைநகரங்களில் உள்ள நகை கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

தங்கம் விலை குறைந்தது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட சிறிய மாற்றத்தால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சுமார் 3 சதவீதம் குறைந்தது. தங்கத்தின் தேவையும் கணிசமாக குறைந்துள்ளது. இதனால், நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 குறைந்தது. கடந்த 5 மாதங்களுக்கு பிறகு, மீண்டும் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 816-க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்ததால் வழக்கத்தை விட நேற்று கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், சுமார் 25 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு தங்கம் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருக்கும். தீபாவளி பண்டிகை நெருங்கும்போது தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x