Published : 14 Aug 2015 05:43 AM
Last Updated : 14 Aug 2015 05:43 AM

டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த 3 பேர் கைது

தி.நகரில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த 3 பேர் கைது செய்யப் பட்டனர். ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை(எண் - 521), பாரில் நேற்று மாலை 4.30 மணி யளவில் திடீரென தீ பிடித்தது. இதனால் பாரில் மது குடித்துக் கொண்டிருந்தவர்களும், டாஸ் மாக் கடை ஊழியர்களும் அலறி யடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். டாஸ்மாக் கடை ஊழியர் பழனிவேலுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீ பிடித்தது குறித்து பழனிவேல் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “டாஸ்மாக் கடைக்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், ஒரு மதுபான பாட்டிலின் பெயரைக் கூறி கேட்க, கடை ஊழியர் பழனிவேல் அதை எடுப்பதற்காக திரும்பியிருக்கிறார். அப்போது 4 பேரும் சேர்ந்து தயாராக பெயின்ட் டப்பாவில் கொண்டு வந்த பெட்ரோலை தரை மற்றும் அங்கிருந்த பொருட்களின் மீது ஊற்றி தீ வைத்துள்ளனர்.

தீ வைத்த நபர்களை பழனிவேல் அடிக்கடி பார்த்துள்ளார். கடந்த இரு தினங்களாக தொடர்ந்து அவர்கள் மதுபானக் கடைக்கு வந்து மது வாங்கி குடித்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அவர் கூறிய அடையாளங்களை வைத்து நடத்திய விசாரணையில் தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த ராமச்சந்திரன்(28), அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(24), தி.நகர் கிரியப்பா தெருவை சேர்ந்த குணநிதி(20) ஆகிய 3 பேரை கைது செய்தோம். இவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

டாஸ்மாக் கடை, பார் அமைந்திருக்கும் இடத்தின் உரிமையாளர் கிருஷ்ண குமாருக் கும், பாரை நடத்தி வரும் நபருக் கும் இடையே நடந்த மோதலில் பாருக்கு தீ வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். தீ வைப்பதற்காக மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை ஒரு பெயின்ட் டப்பாவில் பிடித்துக் கொண்டு வந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வினோத் என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம்" என்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டிருப்பதை அறிந்து நேற்று காலையில் அக்கட்சியினர் மாம்பலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x