Published : 07 Dec 2016 10:22 AM
Last Updated : 07 Dec 2016 10:22 AM

ஜெயலலிதாவை 3 முறை எம்எல்ஏ ஆக்கிய தேனி மாவட்டம்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு 3 முறை எம்எல்ஏ பதவி வழங்கி அழகு பார்த்தது தேனி மாவட்டம்.

முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆரால் அதிமுகவுக்கு அழைத்துவரப்பட்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். மனைவி வி.என்.ஜானகி ஆகியோர் தலைமையில் தனித்தனி அணிகள் உருவானது. இந்த அணிகள் 1989-ல் தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலை சந்தித்தது. அப்போது திமுக ஆட்சியை பிடித்தது.

ஜெயலலிதா முதல்முறையாக தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவை தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே தேர்தலில் ஆண்டிபட்டியில் போட்டியிட்ட வி.என். ஜானகி தோல்வியடைந்தார். முதல்முறையாக எம்எல்ஏ பதவியை தந்து அழகு பார்த்தது தேனி மாவட்டம்.

பின்னர் 2001-ல் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 4 தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததால் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனாலும் அதிமுக ஆட்சி ஜெயலலிதா தலைமையில் அமைந்தது. இக்கட்சியின் எம்எல்ஏவாக ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றி பெற்ற தங்க தமிழ்ச்செல்வன் ராஜினாமா செய்தார். இங்கு 2002-ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா வெற்றி பெற்றார். தொடர்ந்து 2006-ல் நடைபெற்ற தேர்தலிலும் ஆண்டிபட்டியில் மீண்டும் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி பெற்றார். இவ்வாறு 3 முறை எம்எல்ஏ பதவியை அளித்து, ஜெயலலிதாவுக்கு எப்போதும் பக்கபலமாக நின்றது தேனி மாவட்டம்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோதே 1984-ல் ஆண்டிபட்டி தொகுதி எம்.ஜி.ஆரையும் வெற்றி பெற வைத்தது. ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தபோது, அவருக்குப் பதிலாக முதல்வர் பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வத்தை வெற்றி பெற வைத்ததும் தேனி மாவட்டத்தின் போடி தொகுதியே. அதிமுகவின் முக்கிய அரசியல் நிகழ்வுகளில் தேனி மாவட்டத்துக்கு முக்கிய இடம் உண்டு என்பதை தொடர்ந்து நிரூபித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x