Published : 18 Jan 2017 04:22 PM
Last Updated : 18 Jan 2017 04:22 PM
ஜல்லிக்கட்டை தமிழக அரசே முன்னின்று நடத்தியிருக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
சிவகங்கையில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியது:
காந்தி, அண்ணா நூற்றாண்டையொட்டி நன்ன டத்தையுள்ள ஏராளமான கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதேபோல, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளை விடுதலை செய்ய முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், தமிழக அரசு இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது.
தமிழகத்தில் கடும் வறட்சியால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி நடைபெறும் போராட்டங்களை, தமிழக அரசு சட்டம், ஒழுங்குப் பிரச்சினையாக பார்க்காமல் தமிழகத்தின் பாரம்பரிய, கலாச்சார விழாவாக பார்க்க வேண்டும். தமிழக அரசு இடையூறின்றி நான்கு ஆண்டுகளும் பதவியில் நீடிக்க வேண்டும். ஆந்திராவில் ஜல்லிக்கட்டு நடந்துள்ளது. அதே நேரம், தமிழகத்தின் நிலையைப் பார்க்கும்போது, ஏதோ ஒரு காரணத்துக்காக மத்திய அரசுக்கு தமிழக அரசு அஞ்சுகிறது.
இந்த விழாவை அரசே முன்னின்று நடத்தியிருக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வந்தாலும், அதை சந்தித்திருக்க வேண்டும். மேலும், இதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். சர்வதேச பின்னணியில் செயல்படும் பீட்டா அமைப்பு, நமது பாரம்பரிய விழாவுக்கு தடை ஏற்படுத்துவது வருத்தம் அளிக்கிறது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT