Published : 05 Dec 2015 12:27 PM
Last Updated : 05 Dec 2015 12:27 PM
கனமழையால் சென்னை விமான நிலைய ஓடுபாதை முழுதும் நீரால் சூழ்ந்திருந்தது. ஆனால் தண்ணீர் வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் மீண்டும் சனிக்கிழமையான இன்று பகுதியளவு விமான போக்குவரத்து தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதாவது விமானங்கள் இங்கிருந்து புறப்படும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, என்று விமான நிலைய இயக்குநர் தீபக் சாஸ்திரி தெரிவித்தார்.
“இங்கு வந்து நிறுத்தப்பட்டுள்ள 22 விமானங்களுக்கு போக்குவரத்து அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் விமான நிலையம் இன்னும் முழுதும் தயாராகவில்லை. முழு நேர விமான சேவை தொடங்க கால அவகாசம் தேவைப்படும்” என்றார் அவர்.
இந்நிலையில் கோட்டூர்புரம், பள்ளிக்கரணை, முடிச்சூர் ஆகிய பகுதிகளில் வெள்ள நிலைமைகளில் முன்னேற்றம் எதுவும் இல்லை. மேல் தளத்தில் புகலிடம் சென்றுள்ளோர் பால் மற்றும் பிற உணவுப்பொருட்களாக தவித்து வருகின்றனர்.
ஏடிஎம் மையங்களில் நீண்ட நெடிய வரிசைகளில் மக்கள் காத்திருப்பதும் தொடர்கிறது. பெட்ரோல், டீசல் பிரச்சினை இன்று அல்லது நாளை சரியாகிவிடும் என்று கூறும் தமிழக அரசு, வங்கிகள் நாளை ஞாயிற்றுக் கிழமையாக இருந்தாலும் செயல்படும் என்று தெரிவித்துள்ளது.
ரயில் சேவை தொடங்கியது
கடற்கரை-தாம்பரம் இடையே ஓடும் மின்சார ரயில் சேவை, எழும்பூர்-தாம்பரம் இடையே இயக்கப்படுகிறது. அதுவும் பிரதான லைனில் மட்டும் இயக்கப்படுகிறது என்று தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே நகரின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக தென்சென்னை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லை. இதற்கிடையே சென்னையில் பல இடங்களில் பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT