Published : 31 Jan 2017 08:08 AM
Last Updated : 31 Jan 2017 08:08 AM
சென்னை மாநகராட்சி பகுதியில் அனுமதியின்றி கம்பிவடம், குழாய், வடிகால், கால்வாய் போன்ற இணைப்புகளை செய் தாலோ, கழிவு நீரை தெருவில் விட்டாலோ விதிக்கப்படும் அபராதத் தொகையை ரூ. 2 லட்சம் வரை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சட்டப் பேரவையில் நேற்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறப்பட் டிருப்பதாவது:
1919-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டம் 191-வது பிரிவின் படி அனுமதியின்றி கம்பிவடம், குழாய், வடிகால், கால்வாய் போன்ற இணைப்புகள் ஏற்படுத்துவதும், தெருவில் கழிவு நீரை விடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறும் வீட்டு உரிமையாளர், குடியிருப்போருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை அதிகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி சாதாரண கட்டிடங்களுக்கு குடியிருப்புக்கு ரூ. 5 ஆயிரம், வணிகத்துக்கு ரூ. 10 ஆயிரம், சிறப்பு கட்டிடங்களுக்கு குடியிருப்புக்கு ரூ. 25 ஆயிரம், வணிகத்துக்கு ரூ. 50 ஆயிரம், பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கு குடியிருப்புக்கு ரூ. 1 லட்சம், வணிகத்துக்கு ரூ. 2 லட்சம் என அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT