Published : 22 Mar 2017 07:44 AM
Last Updated : 22 Mar 2017 07:44 AM

சென்னை பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

நீதிமன்றத்தில் ஆஜராவதாக உத்தரவாதம் அளித்துவிட்டு விலக்கு பெற்றது ஏன் என்று சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்தார்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று நடந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் வெங்கடரமணி ஆஜரானார். அவரிடம் நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:

அவமதிப்பு வழக்குக்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் இந்த நீதிமன்றத்தில் மார்ச் 22-ம் தேதி (இன்று) நேரில் ஆஜராவார் என உத்தரவாதம் கொடுத்தீர்கள். ஆனால் அதை மீறி, ஆணையர் முதல் அமர்வில் மேல்முறையீடு செய்து நேரில் ஆஜராக விலக்கு பெற்றுள்ளார். எதிர்காலத்தில் உங்கள் உத்தரவாதத்தை எப்படி நம்புவது?

இந்த நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை மீறியதற்காக ஆணையர் ஜார்ஜ் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது? அந்த அதிகாரம் நீதிமன்றத்துக்கு இருக்கிறது.

மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடைபெற்றபோது, அதை விலக்குவதற்கு எந்த போலீஸ் அதிகாரியும் செல்லவில்லை. ஆனால் ஆணையர் ஜார்ஜ் மீதான வழக்கு விசாரணைக்கு மட்டும் அனைத்து போலீஸ் அதிகாரிகளும் உயர் நீதிமன்றத்தில் குவிந்துள்ளனர். அரசுப் பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு தனிப்பட்ட ஒருவருக்காக இத்தனை அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு வரவேண்டிய அவசியம் என்ன?

இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x