Published : 30 Dec 2016 09:13 AM
Last Updated : 30 Dec 2016 09:13 AM

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 100 நட்சத்திர ஓட்டல்கள்: கிளப்களுக்கு போலீஸ் அனுமதி

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்த நட்சத்திர ஓட்டல், கிளப்புகள், பண்ணை வீடுகள் என 100 இடங்களுக்கு போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர். விதிமுறைகளை மீறினால், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

டிசம்பர் 31-ம் தேதி முதல் மறுநாள் அதிகாலை வரை புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும். ஆயிரக்கணக்கான பொது மக்கள் கோயில், தேவாலயம் சென்று சிறப்பு வழிபாடு, ஆராதனையில் ஈடுபடுவார்கள்.

மெரினா, பெசன்ட் நகர், கோவளம் உள்ளிட்ட கடற்கரைகளில் மக்கள் திரண்டு உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள். இது ஆண்டு தோறும் நடைபெறும். இந்த ஆண்டு கொண்டாட்டத்திக்கு சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் கடும் கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதித்துள்ளார்.

நட்சத்திர ஓட்டல்கள், கிளப்புகள், பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் இதுகுறித்து, காவல் ஆணையர் அலுவலகத்திற்கு முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆணையர் எஸ்.ஜார்ஜ் ஏற்கனவே, அறிவித்து இருந்தார்.

அதன்படி, அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில் நட்சத்திர ஓட்டல், கிளப்புகள், பண்ணை வீடுகள் என சுமார் 100 இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

கொண்டாட்டத்தில் ஈடுபட வருவோருக்கு முழு பாதுகாப்பை வழங்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பு என்றும், நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே கொண்டாட்டம் நடத்த வேண்டும் என்றும், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மது பரிமாற வேண்டும் எனவும் கட்டுப்

பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக ஆபாச நடனம் ஆடினால், சம்பந்தப்பட்ட நட்சத்திர ஓட்டல், கிளப்புகள், பண்ணை வீடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் எச்சரித்துள்ளார்.

அதேபோல், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு சாலைகளில் வேகமாக கார் மற்றும் பைக்கில் செல்பவர்களை கட்டுப்படுத்த சாலை நடுவில் தடுப்பு வேலிகள் அமைக்கவும், அதிக திறன் கொண்ட ஒளிரும் மின் விளக்குகளை அமைக்கவும் போக்குவரத்து போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x