Published : 14 Aug 2015 05:52 AM
Last Updated : 14 Aug 2015 05:52 AM

சுருக்குவலை பயன்படுத்துவதை தட்டிக்கேட்ட மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல்: கோவளத்தில் வேலைநிறுத்தம்

கோவளம் கடல் பகுதியில் மீன்பிடிக்க வரும் வெளி மாவட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்து வதாக புகார் எழுந்துள்ளது. இதை தட்டிக்கேட்ட கோவளம் பகுதி மீனவர்கள் மீது நேற்று முன்தினம் இரவு நடுக்கடலில் தாக்குதல் நடந்துள்ளது. இதில் 4 மீனவர்கள் காயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கோவளம், திருவிடந்தை, முட்டுக்காடு ஆகிய பகுதிகளில் கடலில் பாறைகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த பாறைகள் மீன்களின் புகலிடமாக கருதப்படுகிறது. இந்த பகுதிகளில் அதிகப்படியான மீன்கள் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், இந்த பகுதிகளில் மீன் பிடிக்க விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் படகுகளில் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் வெளிமாவட்ட மீனவர்கள், அரசினால் தடை செய்யப்பட்ட சுருக்கு வலை யை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால், கோவளம் பகுதி மீனவர்களுக்கு மீன் கிடைப்பதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவளம் கடலில் மீன்பிடித்த வெளிமாவட்ட மீனவர்கள் சுருக்கு வலையை பயன்படுத்தியதாகவும், அதை கோவளம் பகுதி மீனவர்கள் தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், நடுக்கடலில் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், கோவளம் பகுதியைச் சேர்ந்த சவுந்திரபாண்டியன், சதீஷ், கன்னியப்பன், தேவேந்திரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். கரைக்கு திரும்பிய மீனவர்கள், சம்பவம் குறித்து மாமல்லபுரம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் வேலுவிடம் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து நேற்று கோவளம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இதுகுறித்து, கோவளம் மீனவர்கள் கூறியதாவது: வெளிமாவட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்துவதால் எங்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை. அவர்கள் பெரிய படகுகளில் கூட்டமாக வருவதால், தட்டிக்கேட்கும் மீனவர்களை ஆயுதங்களை கொண்டு தாக்குகின்றனர். சுருக்கு வலையை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மாமல்லபுரம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் வேலு கூறியதாவது: சுருக்கு வலை பயன்படுத்தி மீன் பிடிப்பது சட்ட விரோத செயல். கடலில் மீன் பிடிக்க வரும் வெளிமாவட்ட மீனவர்களை கண்காணிக்க 15 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தியுள்ளோம். சுருக்கு வலையை பயன்படுத்துவது தெரிந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து கேளம் பாக்கம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x