Published : 29 Nov 2014 09:55 AM
Last Updated : 29 Nov 2014 09:55 AM

சில்லறை வணிக நிறுவனங்களுக்கு தனி அமைச்சகம்: தேசிய வணிகர் கூட்டமைப்பு செயலாளர் வலியுறுத்தல்

நாட்டின் மொத்த உற்பத்தியில் அதிக பங்கு வகிக்கும் சில்லறை வணிக நிறுவனங்களுக்கு தனி அமைச் சகத்தை அமைக்க வேண்டும் என்று தேசிய வணிகர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் வலியுறுத்தினார்.

இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அகில இந்திய வணிகர் கூட்டமைப்பு சார்பில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது அகில இந்திய வணிகர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் பேசியதாவது: நாட்டின் மொத்த உற்பத்தியில் சில்லறை வணிக நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அதேசமயம் பன்னாட்டு சில்லறை விற்பனை நிறுவனங்கள் மூலம் வெறும் 15 சதவீத வருமானம்தான் கிடைக்கிறது.

உள்நாட்டு வணிகர்களுக்கு சில்லறை விற்பனை நிலையம் தொடங்குவதற்கு வங்கிகளில் 4 சதவீதம் மட்டுமே கடன் உதவி வழங்கப்படுகிறது. எனவே சில்லறை வணிக நிறுவனங்கள் எளிய முறையில் வங்கிக் கடன் பெற தனி வங்கியை தொடங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மேலும் வரும் டிசம்பர் 18-ம் தேதி புதுடெல்லியில் அகில இந்திய அளவில் சில்லறை வணிக நிறுவனங்களின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சில்லறை வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு தனிக் கொள்கை மற்றும் தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறும்போது, ”டெல்லியில் நடைபெற உள்ள மாநாட்டில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற்று மறுபரிசீலனை செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு சட்டத்தில் நடைமுறைக்கு சாத்தியப்படாத அம்சங்களை நீக்க வேண்டும். சில்லறை வணிக நிறுவனங்களுக்கு ஒருமுறை மட்டும் வட்டி செலுத்தும் நடைமுறையை அரசு உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியில் தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் வணிகர்கள் பங்கு பெற உள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x