Published : 09 Jul 2017 11:57 AM
Last Updated : 09 Jul 2017 11:57 AM

சிறுகாம்பூரில் 2 நாட்களாக சிறைபிடிக்கப்பட்டுள்ள மணல் லாரிகள்

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் அருகே நெ.2 கரிய மாணிக்கம் ஊராட்சியில் உள்ள சிறுகாம்பூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்படுகிறது.

இங்கு உள்ளூரைச் சேர்ந்த சுமார் 50 லாரிகளுக்கு நாள்தோறும் மணல் அளிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென ஆன்-லைனில் பதிவு செய்துள்ள லாரிகளுக்கு மட்டுமே மணல் தரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறினராம்.

ஆனால், 6-ம் தேதி இரவு வெளியூரைச் சேர்ந்த 8 லாரிகளுக்கு மணல் விற்பனை செய்யப்பட்டதாம். இதுகுறித்து அறிந்த உள்ளூர் லாரி உரிமையாளர்கள், 8 லாரிகளையும் சிறைபிடித்து வாத்தலை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் (ஜூலை 7) மணல் குவாரிக்கு விடுமுறை என்று அதிகாரிகள் கூறினராம்.

ஆனால், அன்று மாலை வெளியூரைச் சேர்ந்த 47 லாரி களுக்கு மணல் விற்பனை நடைபெற்றதாக அறிந்த உள்ளூர் மணல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மணல் ஏற்றிய 47 லாரிகளையும் மற்றும் மணல் ஏற்றுவதற்காக வந்த வெளியூர் லாரிகளையும் சிறைபிடித்தனர்.

மணல் குவாரியில் இருந்து லாரிகள் வெளியே செல்லவும், வெளியில் இருந்து லாரிகள் உள்ளே வரவும் அவர்கள் அனுமதிக்கவில்லை.

தகவலறிந்து பேச்சுவார்த்தை நடத்த வந்த பொதுப்பணித் துறை அதிகாரிகளும் சிறைபிடிக்கப்பட்டனர்.

பின்னர், வாத்தலை போலீஸார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரிகளை மீட்டுச் சென்றனர்.

ஆனால், சிறைபிடிக்கப்பட்ட மணல் லாரிகள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதனால், மணல் ஏற்றப்பட்ட லாரிகளும், மணல் ஏற்ற வந்த லாரிகளும் நூற்றுக்கணக்கில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக குவாரிக்குள்ளும், குவாரிக்கு வெளியிலும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல, வாத்தலை போலீஸில் ஒப்படைக்கப்பட்ட 8 லாரிகளும் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பொதுப்பணித் துறை வட்டாரங்களில் கேட்டபோது, “பிரச்சினைக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. வரும் 10-ம் தேதிக்குள் நிலைமை சீராகும்” என்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x