Published : 23 May 2015 07:31 AM
Last Updated : 23 May 2015 07:31 AM
சர்வர் கோளாறு காரணமாக கடந்த நான்கு நாட்களாக ரயில் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, காட்பாடி, சூளூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.
இதில் பெரும்பாலானவர்கள் தினமும் சென்னைக்கு வந்து செல்லும் செலவைக் குறைப்பதற்காக மாதாந்திர சீசன் டிக்கெட் பெற்று பயணித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் சீசன் டிக்கெட் வழங்கப்படாததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து, கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த வளர்மதி என்ற பயணி கூறும்போது, “கடந்த நான்கு நாட்களாக சீசன் டிக்கெட் கிடைக்காததால் நான் தினமும் டிக்கெட் எடுத்துச் செல்கிறேன். இதனால், பணம் கூடுதலாக செலவாவதோடு டிக்கெட்டுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதால் வேலைக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை’’ என்றார்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, “டிக்கெட் வழங்கும் கணினிகள் அனைத்தும் ஹைதராபாத்தில் உள்ள சர்வர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அந்த சர்வரில் கடந்த நான்கு நாட்களாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் சீசன் டிக்கெட் வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு நாளில் இப்பிரச்சினை தீர்க்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT