Published : 09 Jan 2015 09:58 AM
Last Updated : 09 Jan 2015 09:58 AM

கொலை செய்யப்பட்டவர் உடல் சூட்கேசில் அடைத்து கழிவுநீர் ஓடையில் வீச்சு: சென்னையில் தொடரும் சம்பவங்கள்

மாதவரத்தில் உள்ள கழிவுநீர் ஓடையில் ஒருவரின் சடலம் சூட்கேசில் அடைத்து வீசப்பட்டுள்ளது.

சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு குமரன் நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் ஓரத்தில் நேற்று காலையில் ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றமும் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து வந்த மாதவரம் போலீஸார் சூட்கேசை திறந்து பார்த்தபோது சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரின் உடல் சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

அதைத் தொடர்ந்து மாதவரம் காவல் துணை ஆணையர் விமலா, ஆய்வாளர்கள் சிவகுமார், சுந்தரம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூட்கேசில் இருந்த சடலத்தை வெளியே எடுத்து ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என சோதனை செய்தனர். சடலத்தின் நிலையை பார்க்கும்போது கொலை நடந்து 4 நாட்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவர் பனியன் மற்றும் டிரவுசர் அணிந்திருந்தார். அவர் உடல் முழுவதும் அடித்து சித்ரவதை செய்ததற்கான அடையாளங்கள் இருந்தன. தங்க மோதிரம், குழந்தை இயேசு படம் பொறித்த டாலருடன் கூடிய வெள்ளி செயின் அணிந்திருக்கிறார். கையில் அணிந்திருந்த கைக்கடிகாரத்தில் ஒரு கார் நிறுவனத்தின் பெயர் இருந்தது.

வேறு எங்கோ கொலை செய்து, உடலை சூட்கேசில் வைத்து கார் அல்லது மோட்டார் சைக்கிள் மூலம் கொண்டுவந்து இங்கே வீசியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இதனால் அந்த வழியாக இரவில் வந்தவர்கள் குறித்த தகவல்களை போலீஸார் திரட்டி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் நேற்று மாலை வரை தெரியவில்லை. கொலை செய்யப் பட்டவர் பற்றி எந்த விதமான தகவலும் கிடைக்காத நிலையில், அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் மட்டுமே போலீஸாருக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.

இறந்தவரின் புகைப்படத்தை சென்னையில் உள்ள குறிப்பிட்ட கார் நிறுவன ஊழியர்களிடம் காட்டி அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை யில் உள்ள ஒரு விடுதியில் கடந்த 23-ம் தேதி இளைஞர் ஒருவர் 9 துண்டுகளாக வெட்டப்பட்டு உடலை சூட்கேசில் வைத்து விருத்தாசலத்தில் வீசிய சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கும் முன் அடுத்து ஒரு சம்பவம் போலீஸாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x